பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் திமுக நிர்வாகி வீட்டை முற்றுகையிட்டு நிர்வாகி மீது பாஜவினர் தாக்குதலில் ஈடுபட்டனர். பெண் கவுன்சிலர்களையும் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அயோத்தியில் ராமர்கோயில் கும்பாபிஷேகம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் பொள்ளாச்சியை சேர்ந்த திமுக மாநில சட்டதிட்ட திருத்தக்குழு உறுப்பினர் தென்றல் செல்வராஜ் கருத்து பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று குமரன்நகர் செல்லும் வழியில் உள்ள தென்றல் செல்வராஜ் வீட்டு முன்பு பொள்ளாச்சி நகர பாஜ தலைவர் பரமகுரு தலைமையில் பலர் அத்துமீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒரு கட்டத்தில் பாஜவினர், திமுக நிர்வாகி வீட்டை முற்றுகையிட்டதுடன், அத்துமீறி வீட்டு காம்பவுண்டுக்குள் செல்ல முயன்றனர். இதையறிந்த, கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் மணிமாறன், பாஜவுக்கு எதிராக கோஷம் எழுப்பியுள்ளார். அப்போது பாஜவினர் மணிமாறனை தாக்கினர். அங்கு நின்ற திமுக கவுன்சிலர் மணிமலா, முன்னாள் கவுன்சிலர் லதா செல்வராஜ் உள்ளிட்ட மகளிரையும் தாக்க முயற்சித்ததாக தெரிகிறது. இதையறிந்த போலீசார் விரைந்து சென்று, சமரச முயற்சியில் ஈடுபட்டனர். இருப்பினும் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க, போலீசார் அவர்களை சமரசம் செய்து தனித்தனியாக அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பாஜவினரை கைது செய்ய கோரி திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் காந்தி சிலை அருகே போராட்டத்தில் ஈடுபட்டு மறியலில் செய்தனர். அவர்களிடம் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திமுகவினர் போராட்டத்தை கைவிட்டனர். இதையடுத்து திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர், பாஜவினர் மீது டிஎஸ்பி அலுவலகத்தில், புகார் தெரிவித்தனர்.
The post பொள்ளாச்சியில் வீட்டை முற்றுகையிட்டு திமுக நிர்வாகி மீது பாஜவினர் தாக்குதல்: பெண் கவுன்சிலர்களை தாக்க முயன்றதால் பரபரப்பு appeared first on Dinakaran.